திருநெல்வேலி: தாமிரபரணியின் பெருமையை எடுத்துரைக்கும் தகவல் பலகைகள் மீது தவெகவினர் ஒட்டிய போஸ்டர்களால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், தாமிரபரணி ஆற்றின் வரலாறு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம், மற்றும் அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் இரும்புத் தகடுகளில் பண்டைய வரலாறு குறித்த தகவல்கள் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நிதியமைச்சருமான மரிய வில்சன் ஆய்வுப் பயணமாக கடந்த சனிக்கிழமை திருநெல்வேலி வந்திருந்தார். அவரை வரவேற்கும் வகையில் தவெக நிர்வாகிகள் நகரின் பெரும்பாலான பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், தாமிரபரணியின் பெருமைகளை எடுத்துரைக்கும் தகவல் பலகைகள் மீதும் ஒட்டப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். இச்செயல் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.தாமிரபரணி நதியின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துரைக்கும் பகுதிகள் போஸ்டர்களால் மறைக்கப்பட்டதுடன், சில இடங்களில் தகவல் பலகைகள் சேதமடைந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இன்று மாநகராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, அதனை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
Comments