நீலகிரி: ஊட்டி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் கரடி நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஊட்டி அருகிலுள்ள ரிச்சிங் காலனி குடியிருப்பு பகுதியில் காலை நேரங்களில், ஒற்றைக் கரடி ஒன்று ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றது. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு வந்திருந்த சிலர், முதலில் கரடியை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், பின்னர் இந்த தகவல் அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.கரடி நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "கடந்த சில வாரங்களாக இந்த ஒற்றைக் கரடி அடிக்கடி இரவு மற்றும் பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உணவு தேடி அலைந்து வருகிறது. வீடுகளின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், குப்பை தொட்டிகள், தோட்டப் பயிர்கள் ஆகியவற்றை சேதப்படுத்திய சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது.இதன் காரணமாக வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியே செல்ல தயங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது" என தெரிவித்தனர்.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கரடியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் கரடி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்துள்ளனர்.
Comments