சென்னை: சென்னையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் ஆண்களுக்கு இணையாக சிறுவர், சிறுமியர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தி பார்ப்போரை வியக்க வைத்தனர்.திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சென்னை கிழக்கு மாவட்டம் துணை அமைப்பாளர் மோகன் குமார் தலைமையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆணழகன் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. 15 பிரிவில் நடைபெற்ற இந்த ஆணழகன் போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது உடல் கட்டமைப்புகளை வெளிப்படுத்தி அசத்தினர்.உடல் கட்டமைப்பு மூலம் ஆண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்திய நிலையில், ஆண்களுக்கு இணையாக பள்ளி சிறுவர், சிறுமியர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உடல் கட்டமைப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். சிறுவர்கள் பிரிவில் போட்டியிட்டவர்களை தேர்வு செய்வதில் நடுவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, மேடை ஏறிய அனைத்து சிறுவர், சிறுமியர்களுக்கும் பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. மேலும் அவர்களுடைய பெற்றோர்களையும் மேடையில் ஏற்றியதில் கூடியிருந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கோப்பை மற்றும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட சிறுவர்கள் அவரவருடைய குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Comments