திருநெல்வேலி: நெல்லையில் உள்ள நெல்லையப்பர் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரினம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக சாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு நெல்லையப்பர் கோயிலில் இருந்து தெப்பமண்டபத்திற்கு எழுந்தருளினர்.தொடர்ந்து அங்கு சுவாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற மகா தீபாராதனைக்கு பின் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர் பிரம்மாண்ட மின்விளக்கு அலங்காரத்தில் புதிதாக செய்யப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருச்சுற்று நடைபெற்றது. இந்த திருச்சுற்றை திரளான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments