தேனி: மழைப்பொழிவு இல்லாததாலும், கோடை வெப்பத்தாலும் சுருளி அருவி முற்றிலும் வறண்ட நிலையில் காணப்படுவதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி ஆன்மீக தளமாகவும், சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த அருவிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், தங்களது இல்லங்களில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்களும் வருகை தருவார்கள். அப்படி வரும் நபர்கள் அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கம்.இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவனம் அணை மற்றும் வெண்ணியாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததாலும், கோடை வெயில் சுட்டெரிப்பதாலும் அருவிக்கு வரும் ஆற்றுப்படுகைகளில், முற்றிலும் நீர்வரத்து இல்லை. அதனால், சுருளி அருவி வறண்டு காட்சியளித்து வருகின்றது.இதனால், கோடை விடுமுறையை கொண்டாட சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், வியாபாரிகளும் வணிகம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
Comments