திருவண்ணாமலை: தனது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் அண்ணாமலையார் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு கடந்த சில மாதங்களாகவே திரைப்பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள், இசையமைப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், அவரது 41வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். அங்கு தனது மனைவி ஆர்த்தியுடன் அண்ணாமலையாரைத் தரிசனம் செய்த சிவகார்த்திகேயனுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் வருக்கு மாலை மற்றும் பிரசாதங்கள் என சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.முன்னதாக, சம்பந்த விநாயகரை வணங்கிய அவர், தொடர்ந்து உண்ணாமலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். பின்னர் அம்மன் சன்னிதானத்தில் உள்ள நவகிரகங்கள் மற்றும் சித்தரகுப்தர்களை வழிபட்டார். கோயிலுக்கு வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயனை கண்ட அவரது ரசிகர்கள், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Comments