காஞ்சிபுரம்: பத்திரப்பதிவு அலுவலகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட நபரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீபெரும்புதூர் அருகே வடகல் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவர் அந்த பகுதியில் திமுக நிர்வாகியாக உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதையில் ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் பத்திரப்பதிவு அலுவலர் இல்லாததால் ஆவேசமடைந்த குப்பன், அலுவலரின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு காலை தூக்கி டேபிள் மீது வைத்து, 'நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தும் இன்னும் என்னிடம் பத்திரப்பதிவு தொடர்பான டாக்குமெண்ட் தரவில்லை. யாரும் லஞ்சம் கொடுக்காதீங்க' என அலுவலகம் முழுவதும் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அலுவலகத்திற்குள் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரின் முன்னிலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. இது போன்ற சம்பவம் நடந்த போதும், ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகம் சார்பில் காவல் நிலையத்தில் எந்தவித புகாரும் அளிக்கவில்லை.
Comments