திருவண்ணாலை: அருணாசலேஸ்வரர் கோயிலில் செங்கற்களை அடுக்கி வீடு கட்டும் வேண்டுதல் என ஆந்திர பக்தர்கள் தொடங்கிய புதிய சடங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்கிறது. இங்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சாமி தரிசனம் செய்துவிட்டு 14 கி.மீ கிரிவலம் வருவது வழக்கம்.அதிலும், பௌர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 3 - 6 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரரை வழிபடுகின்றனர். உலகம் முழுவதிலிருந்து வரும் பக்தர்கள் தங்கள் பல்வேறு வேண்டுதல்களை அண்ணாமலையாரிடம் முன்வைத்து காணிக்கை பூஜைகள், சிறப்பு வழிபாடுகளை செய்கின்றனர். அந்த வரிசையில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், சொந்த வீடு கட்டும் கனவுடன் ஒரு தனித்துவமான வழிபாட்டு முறையை தொடங்கியுள்ளனர்.அண்ணாமலையாரை தரிசித்து உண்ணாமுலை அம்மனை வழிபட்ட பின், கோயில் வளாகத்தின் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பேய் கோபுரம் அருகே செங்கற்களை அடுக்கி வைத்து, 'சொந்தமாக வீடு கட்ட வேண்டும்' என்று வேண்டுதல் வைத்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் கனவான சொந்த வீட்டை அடைவதற்காக இச்செயலை செய்கின்றனர். இதை பார்த்து ஈர்க்கப்பட்ட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும், தாங்களும் செங்கற்களை அடுக்கி வைக்கின்றனர். இதற்கு முன் கோயிலில் இத்தகைய நிகழ்வு நடைபெற்றதில்லை எனக் கூறப்படுகிறது.ஆனால், இன்று யாரோ ஒரு ஆந்திர பக்தர் இவ்வாறு செங்கற்களை அடுக்கியதைப் பார்த்து மற்ற பக்தர்களும் அதை பின்பற்றி வருகின்றனர். இதையறிந்த கோயில் நிர்வாகம், துப்புரவு பணியாளர்களை அனுப்பி அடுக்கப்பட்ட செங்கற்களை உடனடியாக அகற்றியது. இருப்பினும், இச்சம்பவம் பக்தர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
Comments