கோயம்புத்தூர்: டாப்சிலிப் பரம்பிக்குளம் சாலையில் சுற்றுலா பயணிகளை பார்த்தவுடன் புதருக்குள் இருக்கும் கரடி வெளியே ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள வன விலங்குகளை பார்ப்பதற்காகவும், இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட தூனாகடவு, பெருவாரி பள்ளம், பரம்பிக்குளம் அணை ஆகிய பகுதிகளை கண்டு களிக்கவும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.இந்நிலையில், நேற்று டாப்ஸ்லிப் பகுதியில் இருந்து, பரப்பிக்குளம் அணைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சாலையில் காரில் சென்றுள்ளனர். அப்போது, சாலை அருகில் இருந்த காட்டெருமைகளை பார்த்தவாறு காரை இயக்கிய போது, புதருக்குள் இருந்து ஏதோ கருப்பு உருவம் தெரிவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது புதருக்குள் இருந்து கரடி குட்டி ஒன்று வெளியே வந்து சாலையில் ஓடியது. இதனை வீடியோ எடுத்த சுற்றுலாப் பயணிகள், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Comments