ராமேஸ்வரம்: மீன்பிடி தொழிலுக்கு உயிர் நாடியாக உள்ள உபகரணங்களை பழுது பார்க்கும் பணிகளில் மீனவர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மீன்பிடி தடைக்காலத்தையொட்டி ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் தங்களது உபகரணங்களை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கடல் பகுதியில் வாழும் மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு மீன்பிடி தடைகாலம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஏப்ரல் 15 இல் தொடங்கிய இந்த தடைக்காலம் ஜூன் 16 வரை 61 நாட்களுக்கு நீடிக்கும். இதனால், மாநிலத்தில் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைக்காலத்தைப் பயன்படுத்தி மீனவர்கள் தங்களின் படகுகள், வலைகள் மற்றும் உபகரணங்களை சீர் செய்வது வழக்கம். அந்த பணியிலேயே ராமேஸ்வரம், பாம்பன் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மராமத்து செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.இதற்காக விசைப்படகுகள் ரப்பர் பலூன் பயன்படுத்தி கரைக்குக் கொண்டு வரப்பட்டன. முன்னதாக, ஒரு விசைப்படகை கடலில் இருந்து கரைக்குக் கொண்டு வர ஒரு நாள் தேவைப்படும். ரப்பர் பலூன் பயன்பாட்டிற்குக் வந்த பின்னர் இரண்டு மணி நேரங்களிலேயே விசைப்படகுகள் கரைக்குக் கொண்டு வரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
Comments