திருநெல்வேலி: கோயில் திருவிழாவில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சால்வை அணிவித்து வரவேற்றது மத நல்லிணக்கத்தை போற்றும் நிகழ்வாக அமைந்தது.திருநெல்வேலி டவுன் செங்குந்தர் வேம்படித்தெருவில் அருள்மிகு ஸ்ரீசுவாமி சங்கிலி பூதத்தார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு கொடை விழா நடைபெறும். அப்போது மேள, தாளங்கள் முழங்க ஊர் மக்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபடுவார்கள். இந்த பகுதியில் புகழ்பெற்ற திருவிழா என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயில் கொடை விழாவில் பங்கேற்பார்கள். இந்நிலையில் சங்கிலி பூதத்தார் திருக்கோயிலில் 120-வது வருடாந்திர மாசி மாத அமாவாசை கொடை விழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த கொடை விழாவில் வழக்கம் போல் சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வந்தனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த இஸ்லாமியர்கள் பால்குடம் எடுத்து வந்தவர்களை சால்வை துண்டு அணிவித்து வரவேற்றனர். இந்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. பால்குடம் எடுக்கும் நிகழ்வை தொடர்ந்து, சுவாமிக்கு 12 மணி அளவில் கொடை விழாவும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.
Comments