ராமநாதபுரம்: திருவாடானை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் புதிததாக மாணவர்கள் யாரும் சேர்க்கை பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது 3ஆம் வகுப்பில் ஒரே ஒரு மாணவி மட்டுமே பள்ளிக்கு வருகை தந்து படித்து வருகிறார். இதுகுறித்து விசாரித்தபோது, இப்பள்ளியில் மற்றொரு மாணவரும் படித்து வருவதாகவும் மொத்தமாக இரண்டு மாணவர்கள் மட்டுமே இங்கு பயில்கிறார்கள் என்று தெரிய வருகிறது.இங்கு பயிலும் மாணவர்களுக்கு தேவையான காலை மற்றும் மதிய உணவு அருகில் உள்ள படப்பை அரசுப் பள்ளியில் இருந்து கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு தேவையான இதர அனைத்து வசதிகளும் அப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய இருக்கைகள், பலகை உள்ளிட்டவை வகுப்பறைகளில் உள்ளன. ஐந்தாம் வகுப்பு வரை இப்பள்ளியில் வழங்கப்படும் நிலையிலும், போதிய மாணவர்கள் சேர்க்கை பெறாதது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments