திருநெல்வேலி: புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் யோகா செய்தபடியே புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒன்பதாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா கடந்த பத்தாம் தேதி தொடங்கி நெல்லை டவுன் மாநகராட்சி வர்த்தகம் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு நாள்தோறும் புத்தகம் வாசிப்பு குறித்து மாணவர்கள் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அந்த வகையில் நெல்லை யோகா அமைப்புகள் சார்பில் யோகா செய்தபடி புத்தகம் படிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி புத்தக திருவிழாவில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் 8 வயது முதல் 10 வயது வரை உடைய 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் யோகாசனம் செய்தபடியே பல்வேறு புத்தகங்களை படித்து அசத்தினர். ஏகபாத, சிரசாசனம், பாதாசனம், கண்ட பேருண்டாசனம், கந்த பீடாசனம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட ஆசனங்களை செய்து அசத்தினர். தொடர்ந்து ஆசனம் செய்தவாறு புத்தகம் படித்த மாணவ மாணவிகளை அங்கிருந்தவர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.மாறிவரும் நவீன காலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதுதொடர்பாக பிரபல எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் வேதனையோடு பேசி வருவதை பார்த்து வருகிறோம். எனவே மீண்டும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் புத்தக வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க எழுத்தாளர்களும் தன்னார்வலர்களும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த குழந்தைகளைக் கொண்டு யோகாசனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
Comments