தூத்துக்குடி: கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் பக்தர்கள் திருச்செந்தூரில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டதிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருகோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.இந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையிலும், நேற்றைய தினம் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையிலும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் காலை முதல் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் காலையில் கோயில் முன்புள்ள கடலில் புனித நீராடி நாழிக்கிணற்றில் குளித்து விட்டு குடும்பத்தோடு முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பொது தரிசன வரிசை, நூறு ரூபாய் கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடி மக்களுக்கான சிறப்பு தரிசன வரிசையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
Comments