கோயம்புத்தூர்: டாப்ஸ்லிப் அம்புலி சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி அருகே புலி நடமாட்டம் இருப்பதால், மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம் டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாம் ஆகியவை உள்ளன. இந்தப் பகுதி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இந்த சுற்றுலா தளத்திற்கு வனவிலங்குகளை காண்பதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை என்பது அதிகரித்து காணப்படுகிறது. டாப்ஸ்லிப் அருகே உள்ள அம்புலி சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி அருகே புலி ஒன்று உலா வந்துள்ளது. அப்போது அங்கு இருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், மாலை 5 மணிக்கு மேல் தங்கும் விடுதிகளை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வாகனங்களில் சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் வனசாலையில் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுக்கக் கூடாது எனவும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments