திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால், பக்தர்கள் மீது தற்காலிகக் கூரை சாய்ந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்கிறது பழனியில் உள்ள பால தண்டாயுதபாணி சாமி கோயில். பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகைபுரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் குழுவாகப் பழனிக்கு வருகை தந்து, இடும்பன் குளத்தில் நீராடி முருகனைத் தரிசிக்கச் சென்றனர். அப்போது திடீரெனப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால், பாதுகாப்பிற்காக அங்கிருந்த தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தகரக் கூரையின் கீழ் பக்தர்கள் ஒதுங்கி நின்றனர். எதிர்பாராத விதமாக அடித்த பலத்த காற்றின் காரணமாக, அந்தத் தகரக் கூரை சாய்ந்து பக்தர்கள் மீது விழுந்தது.இந்த விபத்தில் 18-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கித் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த காயமடைந்தனர். இதில் 5 குழந்தைகளும் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்களும், போலீசாரும் காயமடைந்தவர்களை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்த வருவாய்த் துறை மற்றும் கோயில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இடிந்து விழுந்த கூரைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் பழனிக்கு வந்திருந்த மற்ற பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments