கோவை: தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு இரண்டு யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ வெளியாகியுள்ளது.கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது ஏராளமான காட்டு யானைகள் கூட்டமாக கேரளா வனப் பகுதியிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. ஆகையால், எஸ்டேட் பகுதிகளில் வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை மாலை நேரங்களில் வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கி வாயிலாக வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.மேலும் சோலையார் அணை, முடிஸ், சின்கோனா மற்றும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலைகளில் காட்டு யானைகள் சில முகாமிட்டு அவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை இடைமறைத்து அச்சுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.இந்த மாதிரியான சூழலில் தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் இரண்டு ஆக்ரோஷமாக சண்டையிடும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதுகுறித்து, வால்பாறை வனச்சரகர் சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், "வால்பாறையில் தற்போது அதிக அளவில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள், யானைகளைக் கண்டால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டாம். மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், ஆழியார் சோதனை சாவடியில் முழுமையாக சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது. காட்டு யானைகளின் கூட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்" என தெரிவித்தார்.
Comments