ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் அதிகாலையில் பெய்த ஆலங்கட்டி மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஆடு மாடுகள், கோழிகள் போன்ற வீட்டு வளர்ப்பு பிராணிகளும் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றன.இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று அதிகாலை திடீரென மழை பெய்தது. லேசாக பெய்யத் தொடங்கிய மழை பின்னர் ஆலங்கட்டி மழையாக மாறியது. வீட்டின் மேற்கூரைகள் மீது ஆலங்கட்டி மழை பெய்ததால் பட்டாசு வெடிக்கும் சத்தம் போல கேட்டது. மேலும் அந்த பகுதி முழுவதும் தார்சாலைகளிலும் சிறுசிறு ஐஸ் கட்டிகள் விழுந்து பளிங்கு கற்கள் போன்று சிதறிக்கிடந்தன. அதேபோல், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமார் ஒரு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. மேலும், தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப்பகுதியான தாளவாடி மலைப்பகுதியிலும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் அங்கும் ஆலங்கட்டி மழை பெய்தது. கடும் வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது பெய்துள்ள மழையின் காரணமாக வெப்பம் தணிந்து அந்த பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது. எதிர்பாராதவிதமாக கோடைகாலத்தில் பரவலாக மழை பெய்துவருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments