ஈரோடு: இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் புகுந்து மக்காச்சோள கதிர்களை சேதப்படுத்திய காட்டு யானையின் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் தீவனம், தண்ணீர் தேடி அருகாமையில் உள்ள கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தற்போது ராகி, மக்காச்சோளம் பயிர்கள் கதிர்பிடித்து அறுவடை செய்யும் நிலையில் உள்ளன. சில தினங்களாக யானைகள் இரவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி செய்த பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.இந்த நிலையில், மல்லன்குழி கிராமத்தில் விவசாயிகள், வனத்துறையினர் ஒன்றிணைந்து டிராக்டர், பொக்லைன் மூலம் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மக்காச்சோளம் அறுவடை காலம் என்பதால் அறுவடை செய்த கதிர்களை களத்தில் போட்டு உலர வைக்கின்றனர். இரவில் வரும் யானைகள் கதிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தினந்தோறும் யானைகளை விரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். யானைகளால் சேதப்படுத்தும் மக்காச்சோள கதிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments