நீலகிரி: யானை நடமாட்டம் உள்ளதால் உதகை தொட்டபெட்டா காட்சி முனையம் இன்று தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதி யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், கட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி உதகை நகர குடியிருப்பு பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன.இந்நிலையில் உதகை தொட்டபெட்டா மலை சிகரம் அமைந்துள்ள பகுதியில் யானையின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. மேல் தலையாட்டுமந்து குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு யானை உலா வந்ததை அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களுக்கு செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், தொட்டபெட்டா வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருத்தில் கொண்டு தொட்டபெட்டா காட்சி முனையம் இன்று ஒரு நாள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments