சென்னை: எம்.எல்.ஏ விடுதி வளாகத்தில் செயல்படும் அரசினர் தோட்ட மருந்தகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அருண் ராஜ், உடல் பரிசோதனையும் செய்து கொண்டார்.சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கான அரசு குடியிருப்பு உள்ளது. இங்கு தமிழ்நாட்டிலிருந்து சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் சென்னை வரும் போது தங்கிச் செல்வார்கள். அதன்படி, தற்போதுள்ள எம்எல்ஏக்களுக்கு என தனியாக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காக விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி கூடம், உணவகம் உள்ளிட்டவையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.மேலும், எம்.எல்.ஏ விடுதி வளாகத்தின் பக்கத்திலேயே ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பன்னோக்கு மருத்துவமனையும் செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும், எம்.எல்.ஏ விடுதியிலும் ஒரு மருத்துவமனை உள்ளது.இந்நிலையில், சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இயங்கும் அரசினர் தோட்டம் மருந்தகத்தை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ், அங்கு உடல் பரிசோதனை செய்து கொண்டார்.முன்னதாக, தவெக ஆட்சி அமைந்த பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் நம்பிக்கையுடன் வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
Comments