நீலகிரி: ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிககளில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், பல சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த வாகனங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதால் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வாகன நெரிசலால் பல சுற்றுலா தலங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவர்கள் அவதிப்பட்டனர். சிலர் ஊட்டியில் உள்ள சில சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல முடிந்ததாக தெரிவித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஊட்டியில் உள்ள விடுதிகள், தங்கும் அறைகள் உள்ளிட்டவற்றின் கட்டணங்கள் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments