நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் இரண்டு சிறுத்தைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.குன்னூர் அருகில் உள்ள சந்திரா காலனி பகுதியில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரண்டு சிறுத்தைகள் வலம் வந்த படி உள்ளன. இந்த சிறுத்தைகள் சில வீடுகளுக்குள் புகுந்து நாய்களையும், ஆடுகளையும் வேட்டையாடி செல்கின்றன. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக, இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அங்குள்ள சந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்களையும் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் தனிப்படை அமைத்து, சிறுத்தைகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.சிறுத்தைகளை விரைவில் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தைகளை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுத்தைகளை வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments