திண்டுக்கல்: பழனி மலைப்பாதை படிக்கட்டுகளில் மனைவியை கணவன் அன்போடு தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பழனி மலைக் கோயிலுக்குச் செல்ல வின்ச் மற்றும் ரோப்கார் வசதிகள் இருந்தாலும், வேண்டுதலை நிறைவேற்றவும், புண்ணியம் தேடவும் பெரும்பாலான பக்தர்கள் படிப்பாதையைப் பயன்படுத்தியே மலை ஏறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், மலைக் கோயிலுக்கு வந்த இளம் தம்பதியரின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், கணவர் தனது மனைவியைக் அன்போடு தூக்கிக் கொண்டு, பழனி மலையின் படிக்கட்டுகளில் சிரித்த முகத்துடன் ஏறிச் செல்கிறார். அவரது கைகளில் இருக்கும் மனைவியும் மிகுந்த மகிழ்ச்சியோடு கணவரை அணைத்தபடி பக்தர்கள் கூட்டத்திற்கு இடையே பயணிக்கும் வகையில் அமைந்துள்ளது. இன்றைய அவசர உலகில் கணவன், மனைவிக்கு இடையேயான உண்மையான அன்பையும், புரிதலையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த நெகிழ்ச்சியான வீடியோ காட்சி அமைந்துள்ளதாக முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் கோயில்கள் இதுபோன்று ரீல்ஸ் செய்யும் இடம் இல்லை எனவும் எதிர்ப்பும், கண்டனமும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
Comments