நீலகிரி: உதகை கவர்னர்சோலை – பார்சன் வேலி பகுதிகளில் புலி நடமாட்டத்தை பார்த்த வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் சூழ்ந்த மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகளும், பறவைகளும் வாழ்ந்து வருகின்றன. மேலும் கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் தொடர் உறைபனி பொழிவின் காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகின்றன.இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் பருகுவதற்காக குடியிருப்புப் பகுதியில் படையெடுத்து வருகின்றன. இந்த நிலையில் உதகையை அடுத்த ஆனைகல்மந்து – கவர்னர்சோலை அருகே உள்ள பார்சன் வேலி வனப்பகுதியில், பார்சன் வேலி பகுதி சாலையில், இரவு நேரத்தில் புலி ஒன்று சாலையில் நீண்ட தூரம் ஓட்டமும் நடையுமாக சாலையை கடந்து சென்றது.இதனைப் பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அப்பகுதியில் புலி நடமாட்டத்தை பார்த்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments