நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் லேசான மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நீலகிரி மலை ரயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உதகையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட மலை ரயில், பாதி வழியில் மீண்டும் குன்னூருக்கு திரும்பியது.தண்டவாளத்தில் விழுந்த மண் மற்றும் மரங்களை உடனடியாக சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இன்றும் மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், இன்று சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு பயணம் மேற்கொள்ள வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Comments