அரியலூர்: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை குறிக்கும் வகையில், முட்டை படம் போட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 1-ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும், பெரிய அளவிலான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்றும், தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு விட்டதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் நகரில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் முட்டை படம் போட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த சுவரொட்டியில், பாஜக - அதிமுக ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி பூஜ்ஜியம் என பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Comments