தஞ்சாவூர்: எலியை பிடிக்க சென்று அலுமினிய குடத்தில் தலை சிக்கிக் கொண்ட நாயை, வீட்டின் உரிமையாளர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பாதுகாப்பாக மீட்டார்.கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை கரி குளத்தில் டாக்டர் உமா மகேஸ்வரன் என்பவர் வீட்டில் செல்லப்பிராணியாக ஜானி என்ற நாய் வளர்க்கப்பட்டு வருகிறது. நேற்று (மே 30) காலை அந்த நாய் சாமான்களை உருட்டும் சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் நேரில் சென்று பார்த்த போது, ஜானி அலுமினிய குடத்தில் தலையை விட்டு, வெளியில் எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதனைக் கண்டு அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர், நாயின் உயிரை காப்பாற்ற, தலையில் சிக்கிக் கொண்ட குடத்தை கட்டர் மிஷின் மூலம் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வெட்டி பாதுகாப்பாக எடுத்தார். குடத்தில் இருந்து தலை விடுவிக்கப்பட்ட ஜானி மகிழ்ச்சியுடன் அங்கும் இங்கும் ஓடியது.இதன் பின்னர், அந்த குடத்தில் எலி ஒன்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். எலியை பிடிக்க சென்று தலையை குடத்தில் விட்டதில் நாயின் தலை சிக்கிக் கொண்டது தெரிய வந்தது.
Comments