- 1 hour ago
திருச்சி: மணப்பாறை அருகே நான்கு காட்டெருமைகள் கிணற்றில் தவறி விழுந்ததில், அவற்றில் இரண்டு உயிரிழந்தன.காரைக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (60) என்பவருக்கு சொந்தமாக சுமார் 50 அடி ஆழத்தில் விவசாய பாசன கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் குடிக்க குமரிக்கட்டி, கருப்பு ரெட்டியபட்டி ஆகிய மலைப் பகுதியில் இருந்து சுமார் 15-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வந்துள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக நான்கு காட்டெருமைகள் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளன.இந்நிலையில் தோட்டத்தின் உரிமையாளர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வந்த போது, காட்டெருமைகள் கிணற்றில் விழுந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர் மணப்பாறை வனத் துறையினருக்கும், துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தார். அத்தகவலின் பேரில் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது இரண்டு காட்டெருமைகள் இறந்த நிலையிலும், இரண்டு காட்டெருமைகளும் உயிருக்கு போராடி வந்ததும் தெரிய வந்தது. பின்னர் மதுரையில் இருந்து கலைவாணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, காட்டெருமைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, ராட்சத கிரேன் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டன. அதன் பின்னர் உயிருடன் இருந்த இரண்டு ஆண் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் பத்திரமாக விரட்டி விட்டனர். மேலும் உயிரிழந்த இரண்டு காட்டெருமைகள், கால்நடை மருத்துவர் ரமேஷ் மூலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, கருப்பு ரெட்டியபட்டி வனப்பகுதியில் அருகே பள்ளம் தோன்றி புதைக்கப்பட்டன.
Category
🗞
News
Comments