வேலூர்: குடியாத்தம் அரசு மருத்துவமனை சாலையில் கனமழையால் கழிவுநீருடன் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் நோயாளிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் வெப்பம் நிலவி பொதுமக்களை வாட்டி வந்தது. இந்த நிலையில், இரவு நேரத்தில் திடீரென கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.குடியாத்தம் நகரம், நெல்லூர்பேட்டை, கொண்டசமுத்திரம், சீவூர், மேல் ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், சில இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.குறிப்பாக குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சாலையில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.சாலையில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கியதால் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை மீண்டும் மீண்டும் ஏற்படுவதால், உரிய வடிகால் வசதிகளை மேம்படுத்தி, மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments