விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக மாலையில் தொடங்கி இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலையில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதிகளில் காற்றாற்று வெள்ளம் பல இடங்களில் இருந்து ஒன்றாகி பெரும் ஆறாக உருமாறி கரையை நோக்கி பாய்ந்து வருகிறது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மற்றும் மம்சாபுரம் ராக்காச்சிக்கோயில் பகுதியில் நீர்வரத்து அதிகமாக வருகிறது. மேலும் மாலை நேரங்களில் பெய்யும் கனமழை காரணமாக மழைநீர் மலை முழுவதும் அருவி போல் காட்சியளிக்கிறது. மேலும், பேயனாற்று ஓடையில் நீர்வரத்து அதிகளவில் வருகிறது .நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் அதிகளவில் குளிக்க செல்லக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் ராக்காச்சிக்கோயில், செண்பகத்தோப்பு காட்டழகர்கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மற்றும் அருகே உள்ள நீர்நிலைகளுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments