கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருகிறது. பகலில் ஏற்படும் வெப்பத்தால் நண்பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வராமல் நிழலைத் தேடி ஒதுங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு, கோவில்பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மூடுபனி ஏற்பட்டது. இந்த பனிபொழிவால் பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வந்த இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள், மற்றும் கார்கள் என அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன. மேலும் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை திடீரென பனி பொழிவு ஏற்பட்டு குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Comments