திருநெல்வேலி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகள் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தூதரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் காலை புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபடுவார்கள்.பின்னர், தியாகத்திருநாளை குறிக்கும் வகையில் ஆடு, மாடு போன்றவற்றை பலியிட்டு அதன் இறைச்சிகளை ஏழைகள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள். அந்த வகையில் நெல்லையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதன்படி மேலப்பாளையம் மாநகராட்சி திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகள் ஆர்வமுடன் தொழுகையில் பங்கேற்றனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இதுபோல் மேலப்பாளையம் பஜார் திடல் மற்றும் பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து இஸ்லாமியர்கள் வீடுகளில் குர்பானி கொடுத்து பக்ரீத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
Comments