திருப்பத்தூர்: அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி, வெள்ளாளனூர் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாட்றம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சி வெள்ளாளனூர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 1996ஆம் ஆண்டு மேய்ச்சல் புறம்போக்கு இடத்தில் சுடுகாடு ஒதுக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உயிரிழந்தால் அங்கு உடலை புதைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக அந்த இடம் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், இன்று நூதன முறையில் ’தயவு செய்து ஓட்டு கேட்டு எங்க ஊருக்கு யாரும் வர வேண்டாம்’ என வாசகம் பொருந்திய பேனர் வைத்துள்ளனர். மேலும் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பையும் தெரிவித்தனர். மேலும் அந்த பேனரில் ’தங்கள் கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படையை வசதியும் செய்து தரவில்லை, பல நாட்களாக உள்ள சுடுகாடு பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. இது குறித்து அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, எனவே யாரும் ஓட்டு கேட்க வர வேண்டாம்’ என எழுதியுள்ளனர். மேலும் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Comments