ஈரோடு: கல்லூரி மாணவர் ஒருவர் வேகமாக செல்லும் தனியார் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘படியில் பயணம், நொடியில் மரணம்’ என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். அவை ஏதோ அழகுகாக எழுதப்பட்ட வாசகம் அல்ல, எச்சரிக்கை விடுக்கும் வாசகமாகும். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் என பெரும்பானோர் பயன்படுத்தும் வாகனமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளன. அந்த பேருந்துகளில் பாதுகாப்பாகப் பயணம் செய்ய உரிய வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம். ஆனால், சமீப காலமாக மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு விபத்தில் சிக்கி உயிரிழக்கும் துயர சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த சூழலில் கல்லூரி மாணவர் ஒருவர் தனியார் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணியில் நின்றபடி பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் அதிகப்படியானோர் பயணம் மேற்கொள்கின்றனர். அதில் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்தில் மாணவர்கள் கூட்டமாக படிக்கட்டுகளில் நின்றபடி கதை பேசிக் கொண்டும், செல்போன்களை பயன்படுத்திக் கொண்டும் பயணம் மேற்கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ஒரு கல்லூரி மாணவர் பின்புறம் உள்ள ஏணியில் நின்றபடி பயணம் மேற்கொள்ளும் காட்சியும் பதிவாகியிருந்ததுஇது குறித்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் கேட்ட போது, “சத்தியமங்கலத்திலிருந்து கோவைக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து என்ற வகையில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் இதுபோன்று செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அண்மை காலமாக ஆபத்தை தவிர்ப்பதற்கு அரசு பேருந்துகளில் கதவுகள் போடப்பட்டுள்ளன” என்றார்.
Be the first to comment