ராணிப்பேட்டை: தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஜி.கே. வாசன், திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து வாலாஜாபேட்டை அருகே பிரச்சாரம் நடைபெற்றது. அதில் பங்கேற்று ஜி.கே. வாசன் பேசினார். பிரச்சாரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் விரோதமாக செயல்படும் திராவிட முன்னேற்ற கழகத்தை வீட்டுக்கு அனுப்பக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.தமிழக மக்கள் இந்த அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்," எனக் கூறினார். மேலும், இந்தத் தேர்தல் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அமைச்சர்களுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பெண்கள் தங்களது வாக்குகளின் மூலம் அரசுக்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளனர் என்றும் கூறினார்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும், “எங்களது கூட்டணியே முதல் அணியும், வெற்றி அணியும் ஆகும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். திமுக மேற்கொள்ளும் பொய் பிரசாரங்கள் இனி மக்களிடம் எடுபடாது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
Comments