வேலூர்: மயான கொள்ளை திருவிழாவில் கட்டுப்பாட்டை இழந்த 60 அடி பிரமாண்ட தேர் திடீரென சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய மயான கொள்ளை திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கழிஞ்சூர் பகுதியில் இருந்து சுமார் 60 அடி உயரம் கொண்ட பிரமாண்ட தேர் பாலாற்றை நோக்கி விருதம்பட்டு மேம்பாலம் வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. பாலாற்றில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், தேரை மீண்டும் கழிஞ்சூர் பகுதிக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கின.அப்போது எதிர்பாராத விதமாக தேர் இருந்த வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர் திடீரென இடதுபுறமாக சாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் தேரின் மீது அமர்ந்திருந்த பக்தர்களும், அருகில் நின்று விழாவை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் என 10-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். மேலும் 6 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டன. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி விரைந்து வந்து, விபத்துக்கான காரணங்கள் குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
Comments