திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அதிமுக ஒன்றிய செயலாளரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் 1 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆம்பூரை அடுத்த மாதனூர், ஒடுகத்தூர் சாலையில் உள்ள கடலைக்குளம் பகுதியில் கார்த்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாதனூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜாவின் காரை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் ரூபாய் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அந்த பணத்தை, ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் பூஷ்ணகுமாரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் ஆம்பூர் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Comments