கிருஷ்ணகிரி: தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் கெலவரப்பள்ளி அணையில் குவியல் குவியலாக நுரை பொங்குகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர்வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1,381 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.எனவே, அணையில் பாதுகாப்பு கருதி 1,381 கனஅடி உபரிநீரும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால், ஆற்றிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரில் நுரை பொங்குகிறது.குறிப்பாக, வெள்ளநீர் செல்லும் பாதையெங்கும் குவியல் குவியலாக, பனிப்பாறைகள் போல ரசாயன நுரை பொங்கி வழிகிறது. தண்ணீர் ஓடுவதே தெரியாத அளவுக்கு ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல நுரை ஆர்ப்பரித்து செல்கிறது."ஒவ்வொரு முறை மழைக்காலத்தின் போதும், ஆற்றில் இது போன்று நச்சு நுரை பொங்கி வருவது தொடர்கதையாகிவிட்டது. தொழிற்சாலைக் கழிவுகளும், ரசாயனங்களும் கலந்த இந்த நீரை பாசனத்திற்குப் பயன்படுத்தினால், பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீரும் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகிறது" என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும், “மழை காலங்களில் ஆற்றில் ஏற்படும் இந்த ரசாயன மாசுபாட்டைத் தடுக்கவும், தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதை தீவிரமாகக் கண்காணிக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments