சென்னை: தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன்பாக, வீட்டிற்கு வெளியே குவிந்த ரசிகர்களை பார்த்து விஜய் உற்சாகமாக கையசைத்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அதற்கான பிரச்சாரத்திற்கு இன்னும் சரியாக ஒன்பது நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் பிரச்சார களத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அதேசமயம் சில இடங்களில் முறையான அனுமதி கிடைக்கவில்லை எனவும், அதிக கட்டுப்பாடு விதிப்பதாகவும் கூறி பிரச்சாரத்தை ரத்து செய்தும் வருகிறார். அதன்படி, கடைசியாக காரைக்குடி மற்றும் கடலூரில் நடக்கவிருந்த அவரது பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டன.இந்த சூழலில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று காலை புறப்பட்டார். அப்போது அவரது வீட்டிற்கு வெளியில் காத்திருந்த ரசிகர்களை பார்த்து உற்சாகமாக விஜய் கையசைத்தார். அவரை கண்ட ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.அதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாகக் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர், மகாதானபுரம் சந்திப்பு பகுதியில் பிற்பகல் 3 மணியளவில் விஜய் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
Comments