அரியலூர்: கனமழையால் உடையார்பாளையம் ஸ்ரீ பயறணீநாதசுவாமி திருக்கோயிலின் காண்டீப தீர்த்த குளம் முழு கொள்ளளவையும் எட்டி ரம்மியமாக காட்சியளிக்கிறது.அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மத்தியில் அமைந்துள்ளது 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பயறணீநாதசுவாமி திருக்கோயில். ஜமீன்தாரர்களால் உருவாக்கப்பட்ட இந்த கோயிலை அழகுப்படுத்துவது இங்கு வில் வடிவில் அமைந்துள்ள காண்டீப தீர்த்த குளம். மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தில் உடையார்பாளையத்தில் இருந்ததாகவும், அப்போது தண்ணீர் இல்லாமல் விநாயகரை வேண்டியதால், அவர் அர்ஜுனனின் காண்டீப வில்லை வளைத்து குளத்தை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.அதேபோல், இந்த குளத்தில் குரு முனிவர் அகத்தியர் அமர்ந்து தியானம் செய்தபோது தவளைகள் சத்தமிட்டு இடையூறு செய்துள்ளது. இதனால் கோபமடைந்த முனிவர், இனி இந்த குளத்தில் இருக்கும் தவளைகள் சத்தம் போடக்கூடாது என சாபமிட்டார். அன்று முதல் இந்த குளத்தில் இருக்கும் தவளைகள் சத்தம் போடுவதில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில், டிட்வா புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த மழையால், சிறப்புமிக்க ஸ்ரீ பயறணீநாதசுவாமி திருக்கோயிலின் காண்டீப தீர்த்த குளம் முழுவதுமாக நிரம்பி ரம்யமாக காட்சியளிக்கிறது. இதனால், குளத்தின் அழகை அப்பகுதி மக்கள் வந்து கண்டு ரசித்து வருகின்றனர்.
Be the first to comment