தஞ்சாவூர்: கும்பகோணம் ராமசாமி திருக்கோயிலில் ராமநவமி பெருவிழாவின் கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் ராமசாமி திருக்கோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட மிகப்பழமையான வைணவத் திருக்கோயிலாகும். இங்கு மூலவர் இராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறார். இராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் இராமனுடைய என இருவரது வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் விணையும், மறுகையில் இராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சியளிக்கிறார்.மேலும் இக்கோயிலின் உட்பிரகாரத்தினை மும்முறை வலம் வந்தால் இராமாயண கதையை முழுமையாக காட்சி வடிவில் வண்ண வண்ண ஓவியமாக காணலாம். இத்தகைய சிறப்பு பெற்ற இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா இன்று உற்சவர் இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் சமேதராய் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்திய இசை முழங்க, கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடியினை கொண்டு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
Comments