தேனி: மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மேளதாளத்துடன் சீர்வரிசை கொண்டு வந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த பெரிய பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பெரிய பள்ளிவாசலில் கூட்டு பிரார்த்தனை மற்றும் தொழுகையில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு தேவதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த இந்து மக்கள் ஒன்றிணைந்து வெடி வெடித்து மேளதாளத்துடன் பழம், தேங்காய், மாலை உள்ளிட்ட சீர்வரிசைகளை சுமந்தவாறு ஊர்வலமாக வந்து பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்றனர். சீர்வரிசையுடன் வந்த தேவதானப்பட்டி பொதுமக்களை பள்ளிவாசல் தலைமை இமாம் மற்றும், பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கட்டித்தழுவி வரவேற்றனர்.இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து சகோதரர்கள் மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து வந்த நிகழ்வு மத நல்லிணக்கத்தை எடுத்துக் காட்டும் விதமாக அமைந்தது. இந்த நிகழ்வுக்கு அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Comments