தேனி: போடி நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சிறக்காடு பகுதியில் சேகரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பை சேகரிப்பு குடோனில், நேற்று மாலை 4 மணியளவில் திடீரென தீ பற்றியது. இந்த தீயானது மளமளவென அருகில் உள்ள இடங்களுக்கும் பரவியது.தீவிபத்து தொடர்பாக போடி நகராட்சியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போடி, தேனி, கம்பம் மற்றும் மதுரை பகுதியில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவைக்கப்பட்டு தீயணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கடும் புகை மூட்டத்தால் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த தீ விபத்தானது சமூக விரோதிகளால் ஏற்படுத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணத்தால் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments