காஞ்சிபுரம்: விஜயதசமியை முன்னிட்டு முதல் முறையாக பள்ளியில் சேர வந்த மழலைகளை மாலை அணிவித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டது. விஜயதசமி அன்று தொடங்கப்படும் அனைத்து செயல்களும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கையாகும். அந்த வகையில் விஜயதசமியை ஒட்டி பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பது வழக்கமாக இருக்கிறது. அதற்கேற்ப தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகள், கோயில்களில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து கல்வியை ஆரம்பிக்கும் வித்யாசரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பள்ளிகளில் வித்யாசரம்பம் நிகழ்ச்சியில் தனியார் பள்ளியின் தாளாளர் குழந்தைகளை மடியில் அமர வைத்து நெல் மணியில் 'அ' எழுத்து எழுத வைத்தனர்.அதனைத் தொடர்ந்து, பள்ளியில் சேர வந்த குழந்தைகளுக்கு மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர். பள்ளியில் சேர அழுது கொண்டே வந்த குழந்தையை ஆசிரியர்கள் விளையாட வைத்து வகுப்பறையில் அமர வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Comments