திருவாரூர்: பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகத் திகழ்கிறது. இங்குள்ள சனி பகவானுக்கு வாரம் தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது, திருவாரூர் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.அந்த வகையில், இந்த வாரம் சனிக்கிழமையும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், நடிகர் யோகி பாபுவும் சனீஸ்வர பகவானை வழிபடுவதற்காக வந்திருந்தார். அப்போது, ஆலய வழிகாட்டுதல் படி பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வரரை தரிசனம் செய்தார். பின்னர், சிறப்பு அர்ச்சனை செய்த அர்ச்சகர்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினர். கோயிலில் யோகி பாபுவை கண்ட அவரது ரசிகர்கள், ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Comments