தேனி: ஆர்ப்பாட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போதே திடீரென அதிமுக மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி பங்களா மேடு பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் பேசிக் கொண்டிருந்த போதே திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அவரை அருகில் இருந்த நிர்வாகிகள் பிடித்து காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கடுமையான வெயிலின் தாக்கத்தால் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கூறினர்கள்.
Comments