தஞ்சாவூர்: சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சையில் பாரம்பரிய கைவினைப் பொருள் பயிற்சி முகாம் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்ட அருங்காட்சியகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு (GI) பெற்ற கைவினைப் பொருட்களில் ஒன்றான ‘தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள்’ குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியை நெட்டி வேலைப்பாட்டு கலைஞர் எழில்விழி ராதா வழங்கினார்.தஞ்சாவூர் நெட்டி வேலை என்பது, குளங்களில் வளரும் ‘அஸ்பெரா’ எனப்படும் நீர்வாழ் தாவரத்தின் வெள்ளை நிறத் தண்டுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் நுணுக்கமான கைவினைக் கலை ஆகும். நெட்டித் தண்டின் தோலை நீக்கி, அதன் உட்புற மென்மையான வெள்ளைப்பகுதியைக் கொண்டு கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கத்தியால் செதுக்கப்படும் இக்கலைப்பொருட்கள் எளிதான எடை மற்றும் மென்மையான தன்மை கொண்டவை.தஞ்சாவூர் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்தவும், உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இப்பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு நேரடி பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செல்வி நித்யா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் சௌமியா, சுற்றுலா அலுவலர் வரதராஜன், சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments