வேலூர்: ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.இந்துக்களின் முதன்முதல் கடவுளாக இருப்பவர் விநாயகர். அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு யாகம் செய்து கலச நீரை ஊற்றி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. பின்னர், சந்தன காப்பு அலங்காரம் செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதே போன்று ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் வன்னி மரத்தடியில் அமைந்துள்ள வன்னி மர விநாயகருக்கு அருகம்புல், எருக்கம்பூ மாலை, வன்னி மர இலைகள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Be the first to comment