கோயம்புத்தூர்: வால்பாறையில் குட்டி உயிரிழந்தது கூட தெரியாமல் அதனை சுமந்து சென்ற தாய் குரங்கை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை வனப் பகுதியில் இருந்து பகல் நேரங்களிலேயே உணவு தேடி குரங்குகள் மற்றும் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவுகளை கொடுத்து வருகின்றனர். இதன் விளைவாக குரங்குகள் வனப் பகுதிக்குள் செல்லாமல், சாலையில் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது எதிரே வரும் வாகனங்களில் குரங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகின்றன. இதனிடையே வால்பாறை நகர் பகுதியில் சிங்கவால் குரங்கின் குட்டி ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அதனை தாய் குரங்கு தனது மார்பில் அணைத்துக் கொண்டு, அது உயிரிழந்தது கூட தெரியாமல், அங்கும் இங்கும் தாவித் தாவி செல்கிறது. வன விலங்குகளுக்கு உணவு அளிப்பதன் மூலமாகத் தான் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதனை தடுக்க வனத் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வன விலங்குகளை தொந்தரவு செய்தாலோ, இல்லை அவைகளுக்கு உணவு கொடுத்தாலோ அவர்கள் மீது வனச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments